Pages

Tuesday 18 September 2018

குறியின்றி பிறந்திருக்கலாம் நான்

கண்ணகி தேசத்தில் ஓர் நாள்
கதிரவன் இளைப்பாரச் சென்றதால்
எங்கும் இருள் மயம்
அதிரங்கள் அதிர நடக்கின்றாள் அவள்
வழிகின்றன வியர்வை மணம்
சாலையின் குப்பை மணம்
ஆள்பவரின் ஆசியுடன்
தெருவெங்கும் சாராய மணம்
வெறிக்கின்ற இருளின் கண்கள்
அத்தனையும் கடந்தாக வேண்டும்
அரை மணித்துளியில்
உடலைக் காப்பது உடன் பிறந்த
ஓர் ஆதி உணர்வு
பெண்ணாய் பிறந்தால் அது பீதியுணர்வு
குறிகளுக்கு அஞ்சியே நகர்கின்றன அவள் நொடிகள்
தெருவின் திருப்பங்களில்
அவள் வாழ்வின் திருப்பங்கள் ஒளிந்திருக்கலாம்
பேருந்தில் உரசியவன் நாற்றம்
கழுத்தோரம் எரிகிறது
இதோ வீடு
பாதுகாப்பின் கூடு
நுழைந்ததும் வருகிறது மூச்சு
சிறுநீரின் அழுத்தலோடு
கழிக்கையில் இன்றும் தோன்றுகிறது
"கண்ணகியாம்
கற்பாம்
மயிராம்
குறியின்றி பிறந்திருக்கலாம் நான்."

No comments:

Post a Comment