Pages

Friday 12 June 2015

கவிஞனின் காதலி...

ஹைக்கூ கவிதை வடிக்கும்
ஹைடெக் கவிஞனவன்.
கணிணினியின் திரையில்
கவிதை ஒன்று வடிக்கின்றான்..
நடனமாடும் விரல்களை
வலை கொண்ட மீனைப் போல்
வதை கொண்டு காண்கின்றாள் அவள்.

“மறந்தே விட்டானா என்னை ?”
வறுமை
வன்மை
காதல்
காமம்
எதுவந்த போதும்,
எனை அன்றோ தேடுவான்.

உலகம் உறங்கிய நேரம்
உணர்வுகள் உறங்காத அவனிடம்
உறவாடியவள் நான் தானே
உணர்வுகள் உந்திய வேகம்
அவன் விரல்களின் வன்மம் ஆகும்
அதை மெலிதாய் தாங்கிய என் தேகம்

அத்தனையும் மறந்தானோ?

எத்தனையோ ஏக்கம் தாங்கி
மையல் கொண்டவன் மறந்ததால்
மை கொண்ட விழியினிலே
அழவும் ஒரு வழி இன்றி
அமைதியாக அமர்ந்திருந்தாள்..
ஆங்கோர் வெள்ளைத்தாள் மேல்

அவன் பேனா எனும் காதலி...



ஸ்ரீ