Pages

Saturday 4 October 2014

காந்தியும் கண்ணோட்டங்களும்........




வணக்கம்.

தலைப்பைப் பார்த்ததும் காந்தியை புகழ்ந்து...வரலாற்றைப் பற்றி வருடங்களின் கணக்கை சொல்லி வெறுப்பேத்தப் போகிறேன் என்று எண்ண வேண்டாம்.நிச்சயமாக இல்லை.

இது காந்தியயும், நமது கண்ணோட்டங்களையும் பற்றிய பதிவு.
இந்த பதிவினை எழுதத் தூண்டுகோலாக அமைந்தது சமீபத்தில் ஃபேஸ்புக்கில் தோழி ஒருவருடன் நடந்த விவாதம்..

பொதுவாகவே முழு விபரமும் தெரிகிறதோ , தெரியவில்லையோ கருத்து சொல்வதில் நம்மை அடித்து கொள்ள ஆளே கிடையாது....அப்படி சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவர் சொன்ன வார்த்தைகள் தான் இந்த பதிவின் அவசியமானது..

“ எனக்கு காந்திய புடிக்காது, அவர் மட்டும் இல்லைனா நாம இன்னைக்கி எங்கேயோ போய்ருப்போம்...” இவைகள் தன் அவர் சொன்ன வார்த்தைகள்.
அது அவரோட கருத்து ..அதில் என்ன தவறு? என்று நீங்கள் கேட்கலாம்,நியாயம் தான்.

 அவரிடம் “சரி உனக்கு எதனால அப்படித் தோன்றுகிறது”. என்று கேட்டதற்கு சரியான விளக்கம் தரமுடியவில்லை...அவரால் மட்டுமல்ல அவ்வாறு சொல்லும் பலரால் விளக்கம் சொல்ல முடியவில்லை..

காந்தியை பிடிக்காது என்று சொல்லும் பலரிடம் கேளுங்கள்..

காந்தி ஏன் அகிம்சையை தேர்ந்தெடுத்தார்?
கிராமப் பொருளாதாரம் என்றால் என்ன ?
சுய சார்புடைய பொருளாதாரம் என்றால் என்ன ?
இதெல்லாம் ஏன் உங்களுக்கு அபத்தமாகத் தோன்றுகிறது...?

இதையெல்லாம் கேட்டுப் பாருங்கள்...நிச்சயம் பதில் வராது...அப்படி பதில் வந்தால் அந்த நபரின் விமர்சனத்தை நிச்சயம் செவி மடுத்துக் கேட்க ஆவலாக இருக்கிறேன்.

விமர்சனம் என்பது நமது உரிமை என்றால் , எதையும் முழுதாக தெரிந்த பிறகு விமர்சிப்பது நமது கடமை.

“ பாகிஸ்தான் பிரிஞ்சு போனதுக்கு அவர்தான் காரணம்..சுபாஸ் தோத்துப் போனதுக்கு அவர்தான் காரணம்”இப்படி பல பேர் எங்கயாவது எதையாவது அரைகுறையாகக் கேட்டுவிட்டு காந்தியை எனக்குப் பிடிக்காது என்பது அபத்தம்

காந்தி .....பலரால் மஹாத்மாவாகவும் சிலரால் தனது சித்தாந்தங்கள் மூலம் முன்னேற்றதிற்கு தடையாகவும் நினைக்கப்படுகிற மனிதர்.,..நான் இந்த இரு தரப்பையும் சேர்ந்தவன் அல்ல..

கல்லூரி நாட்களில் அகிம்சை, கிராம பொருளாதாரம், சுய சார்புடைய உற்பத்தி இதையெல்லாம் பற்றி பேசும் போது சத்தியமாக காந்தியை கழுவி ஊற்றிய கூட்டத்தில் எனக்கும் முக்கிய பங்குண்டு.அதற்கான காரணமும் உண்டு. சுபாஷ் சந்திர போஸூக்கும் ,சே குவேராவுக்கும் ரசிகனாக இருந்த படியால் காந்திய தத்துவங்கள் பெரிதாக ஈர்க்கபடவில்லை..அதை வாசிக்கும் எண்ணமும் இல்லை..

எப்போதோ யாரோ ஒரு விவாதத்தின் போது சொன்ன வார்த்தைகள் தான்..எனது மொத்த கண்ணோட்டத்தையும் மாற்றியது...

ஒருவரை விமர்சிக்கும் முன்..அவரைத் தெரிந்து கொள்” இவைகள் தான் அந்த வார்த்தைகள்.

அதன் பிறகு காந்தியை பற்றி வாசிப்புகளின் மூலம் காந்தியை வெகு அருகில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது... இன்றும் தொடர்கின்றன அந்த வாசிப்புகள்.. அதில் காந்திக்கு எதிராக எழுதப்பட்ட புத்தகங்களும் அடங்கும்.

சரி இப்போது காந்தியைப் பற்றிய எனது கண்ணோட்டத்தினை பதிவு செய்து விடுகிறேன்.

என்னைப் பொறுத்தவரை காந்தி, தான் வாழ்ந்த காலத்தில் தன்னால் தனது தேசத்திற்கு என்ன செய்யமுடியுமோ அதை வெகு சிறப்பாக செய்த ஒரு மாமனிதர்...காந்தியை நான் நேசிப்பதற்கு பல விஷயங்கள் இருந்த போதும் ஒன்றினை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

காந்தியின் அகிம்சையை பற்றி...

ஒரு உதாரணத்திற்கு இப்படி வைத்துக் கொள்வோம்..நாம் எல்லாருமே நாட்டின் மேல் பற்று கொண்ட இந்தியர்கள்..ஒரு வேளை, நாளை நாட்டிற்காக உங்களது வேலை வெட்டியெல்லாம் விட்டுவிட்டு வாருங்கள் என்று ஒருவர் அழைத்தால் நம்மில் எத்தனை பேர் செல்வோம்..உடனே அதெல்லாம் நாங்க போவோம் என்ற வெட்டிவிவாதங்கள் வேண்டாம்.(லோக்பால் போராட்டத்தில் நம்மில் எத்தனை பேர் கலந்து கொண்டோம் என்பது நமக்கே தெரியும்).உண்மையை சொல்வதானால் நாம் எல்லாருமே யோசிப்போம்..நன்றாக படித்து , போதுமான அளவு உலக அறிவு இருக்கும் நாமே இவ்வளவு யோசிப்போம் என்றால்..1900 ஆண்டுகளில் அடுத்த வேளை சோற்றுக்கே வழி இல்லாத உழவனையும், நெசவாளனையும்
“போராட வா என்று அழைத்து கையில் துப்பாக்கி தருவது சாத்தியமா?
சாத்வீக முறையில் சிறு சிறு வெற்றிகள் மூலம் அவர்ளை  உந்திக்  கொண்டு செல்வது தான் சாத்தியம்.அதைத்தான் காந்தியும் செய்திருக்கிறார்.
இப்போதைக்கு இந்த பதிவினை இங்கே முடிக்க விரும்புகிறேன். நான் சொல்ல விழைவதெல்லாம் ஒன்று தான்..
கடவுளையும் விமர்சிக்கும் இனத்தவர்கள் நாம்..ஆனால் தகுந்த புரிதலுக்குப் பின்னால் விமர்சிப்போம்...


கண்ணோட்டங்கள் தொடரும்.......