Pages

Wednesday 23 December 2015

மரணத்தை ரசிக்கின்றேன் நான்.

இன்றல்ல நேற்றல்ல
நெடு நாளாய் ஒரு கனவு..
மரணம்...
மழலையின் துயில் போல்
மணித்துளிகளில் நிகழ்வதனால் 
மாறாத காதல் அதன் மேல்.

வரம் என்று கிடைக்குமென்றால்
மரணம் அதை வடிவம் செய்யும்
வரம் வேண்டும் எனக்கு.

சுகமோ சோகமோ
ஏதோ ஒரு உச்சத்தில்,
முத்தத்தின் முடிவில்
எதிரியின் மடியில்
ஏதோ விடுமுறை நாளில்
எவனோ ஒருவன் பார்க்கையில்
மரணம் எனக்கு வரவேண்டும்
ஏனென்றால்,
ரசிகன் இல்லா உச்சகாட்சி
நாடகத்தில் ருசிப்பதில்லை.

அபசகுனம் என்கிறாள் அம்மா
கடிந்து கொண்டாள் காதலி
முட்டாள் நீ என்றான் நண்பன்.
ஆயினும்
மரணத்தை ரசிக்கின்றேன் நான்.
ஏனென்றால்.
அர்த்தம் தேடும் வரிகள் தான்

கவிதையின் முற்றுபுள்ளியை ரசிக்கின்றன.....